டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், சண்டிகரில் இருந்து வந்த விமானம் ஒன்றில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளிடமும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் இருந்த 2 பயணிகளின் பைகளில் சுமார் 3 கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில், கொல்கத்தா செல்ல இருந்த ஒரு பயணியிடம் மொத்தம் 6.48 கிலோ எடை கொண்ட 39 தங்க கட்டிகள் இருப்பதை சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ2.8 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அந்த நபர் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மூலக்கதை