சென்னையில் இன்று கடைசி டி20 ‘ஒயிட்வாஷ்’ முனைப்பில் இந்தியா

தினகரன்  தினகரன்
சென்னையில் இன்று கடைசி டி20 ‘ஒயிட்வாஷ்’ முனைப்பில் இந்தியா

சென்னை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும் அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 1-3 என்ற கணக்கிலும் தோற்றது.  இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடந்த முதல் 2 போட்டியிலும் வெற்றியை வசப்படுத்திய இந்தியா தொடரையும் கைப்பற்றியது.இந்த நிலையில், சம்பிரதாயமான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது.  இந்திய அணியி உமேஷ், குல்தீப், பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், தொடரில் இதுவரை விளையாடாத வீரர்கள் களமிறங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். ஷ்ரேயாஸ் அய்யருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ரோகித் தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என ஒயிட்வாஷ் செய்ய வரிந்துகட்டும் நிலையில், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 2வது சர்வதேச டி20 இது. 6 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.இந்தியா:  ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஷாபாஸ் நதீம், சித்தார்த் கவுல்.வெஸ்ட் இண்டீஸ்: கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மயர், கீமோ பால், கியரன் போலார்டு, தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஓஷேன் தாமஸ், கேரி பியரி, ஒபெத் மெக்காய், ரோவ்மன் பாவெல், நிகோலஸ் பூரன்.அனுபவம் இல்லாததே தோல்விக்கு காரணம்...சென்னையில் நடைபெற உள்ள கடைசி போட்டியில் எங்கள் ஸ்பின்னர்கள் சிறப்பாகப் பந்துவீசுவார்கள். இருக்கும் வீரர்களைக் கொண்டுதான் விளையாட முடியும். திடீரென ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது. டி20ல் எங்கள்  வீரர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. ஆனால், அப்படி விளையாட சென்ற மூத்த, அனுபவ வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பாததுதான் பிரச்னை. அதுதான் 2-0 என்ற கணக்கில் தொடரை இழக்க காரணம். இந்தியாவில் விளையாடுவது சவாலானதுதான். கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று எதிர்பார்த்தோம். வீரர்கள் ஒருங்கிணைந்து, நிலைத்து நின்று விளையாடாதது ஏமாற்றத்தை அளித்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான போட்டிகளிலும் முக்கிய பங்காற்றி உள்ளார். அவரை கணிக்க முடியவில்லை. எங்களிடம் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் அனுபவம் குறைவாக உள்ளது. முதல் தர போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை. சிலர் காயமடைந்ததும் பின்னடைவுக்கு காரணம். நாங்கள் தொழில்முறை ஆட்டக்காரர்கள். கூடவே புதிய பயிற்சியாளரின் திட்டங்களை புரிந்துகொள்வதுடன், களத்தில் அவற்றை சரியாக செயல்படுத்துவதும் அவசியம். உலக கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. மூத்த வீரர்கள் அணிக்கு திரும்புவதன் மூலம் அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். - வெஸ்ட் இண்டீஸ் வீரர் தினேஷ் ராம்தின்.

மூலக்கதை