அடுத்த 48 மணிநேரங்களுக்கு பரிசில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!
நவம்பர் 11 நிகழ்வுகளை ஒட்டி, இந்த வார இறுதி இரண்டு நாட்களும் பரிசில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. முதலாம் உலக மகா யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவு நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவில் 98 வெளிநாட்டு பிரதிநிதிகள், 72 ஜனாதிபதி/பிரதமர்கள் என பலர் கலந்துகொள்கிறார்கள். இவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலேனியா ட்ரம்ப் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இன்று சனிக்கிழமை இவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை காலை முதல் பரிசில் பல்வேறு வீதிகள் முடக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பரிசுக்குள் மொத்தம் 10,000 அதிகாரிகள் ஆயுதங்களுடன் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் எனவும், 300 மீட்புப்படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை முன்னதாக உள்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார்.