3-வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ், குல்தீப், பூம்ராவுக்கு ஓய்வு

தினகரன்  தினகரன்
3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ், குல்தீப், பூம்ராவுக்கு ஓய்வு

சென்னை,: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் மோதவுள்ள இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் உமேஷ், குல்தீப், பூம்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் போட்டித் தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 ஆட்டங்களிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது.இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா மற்றும் ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் வகையில் அவர்களுக்கு ஓய்வளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்ததாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஷாபாஸ் நதீம், சித்தார்த் கவுல்.வெஸ்ட் இண்டீஸ் தீவிர பயிற்சி: இந்தியாவுடன் 3வது டி20 போட்டியில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று தொடர்களையும் இழந்துவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் உள்ளனர். இதனால் அவர்கள் வலைப்பயிற்சில் அதிக நேரம் ஈடுபட்டனர். ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகின்றனர்.

மூலக்கதை