சரக்கு ரயில் போக்குவரத்து ரூ.1,774 கோடி வருவாய்
சென்னை:தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளதால், ஏழு மாதங்களில், 1,774 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல், அக்டோபர் வரை ஏழு மாதங்களில்,தெற்கு ரயில்வே, 2.08 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது, 2017 –18ம் ஆண்டைவிட, 34 சதவீதம் அதிகம் ஆகும்.இரும்பு, இரும்பு தாது, நிலக்கரி, ஸ்டீல், சிமென்ட், தொழிலகங்களுக்கான மூலப்பொருட்கள், கயிறு, ஜிப்சம் மற்றும் உணவு தானியங்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளன.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, நிலக்கரி போக்குவரத்து, 67 சதவீதம் அதிகரித்துள்ளது. மின் வாரியம், தமிழ்நாடு பவர் கம்பெனி, உடுப்பி பவர் கார்ப்பரேஷன் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கோக் நிறுவனங்களின் சரக்குகள் அதிகளவில் கையாளப்பட்டுள்ளன.
இதனால், தெற்கு ரயில்வேக்கு, 2018 ஏப்ரல் முதல், அக்டோபர் வரை, ஏழு மாதங்களில் சரக்கு போக்குவரத்தால், 1,774 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது, சரக்கு போக்குவரத்தால் வருவாய், 44 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.