எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனைக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் முனைவர் பட்டம்

தினகரன்  தினகரன்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனைக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் முனைவர் பட்டம்

லண்டன் : எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை அருணிமா சின்ஹாவிற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மாற்றுத் திறனாளி இந்திய வீராங்கனையான அருணிமா சின்ஹா முதல் முறையாக கடந்த 2013ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி வீராங்கனையான இவர் பிறப்பிலே மாற்றுத் திறனாளி இல்லை. ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்து நின்றபோது அவருக்கு இந்த துக்க சம்பவம் நேரிட்டது. ரயிலில் கொள்ளையர்கள் தள்ளி விடப்பட்டதில் தனது இடது காலை இழந்தார். ஆனால் காலை இழந்ததால் அவர் வீட்டிலே இருந்துவிடவில்லை. பல்வேறு சாதனைகளை செய்ய தொடங்கினார். மன உறுதியால் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அதுமட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மிகப் பெரிய மலைகளையும் ஏறி அருணிமா சின்ஹா சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை பாராட்டி மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று அருணிமா சின்ஹாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இதுகுறித்து பேசிய அருணிமா சின்ஹா, இந்த விருது இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறது என்றும், நீங்கள் கடுமையாக போராடி உங்களது இலக்கை அடையும் பட்சத்தில் அது நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறனாளி வீராங்கனை அருணிமா சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை