திருச்சி மாநகராட்சி சார்பில் திறந்தவெளி நூலகம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

திருச்சி, புத்தூரில் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்த வெளி  நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

 இந்த நூலகத்துக்கு கதவுகள் கிடையாது.  புத்தகங்கள் நனையாமல், சேதம் அடையாமல் இருப்பதற்காக கூரை அமைக்கப்பட்டு உள்ளது.   இரும்பினால் ஆன அலமாரிகளில் மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம்  புத்தகங்கள் வைக்கப்படும். 

பொதுமக்கள் இங்கு வந்து இலவசமாக  புத்தகங்களை எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் அங்கேயே வைத்து  விடலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களிடம் உள்ள உபயோகம் இல்லாத  புத்தகங்களை இங்கு வைத்துவிட்டு செல்லலாம். 24 மணி நேரமும் இந்த நூலகம்  திறந்து இருக்கும். மாநகராட்சி ஊழியர் ஒருவர் மட்டும் பணியில் இருப்பார்.

இதுதொடர்பாக  திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது: 

இந்த நூலகத்துக்கு  ‘’லிட்டில் பிரீ லைப்ரரி’’ என ஆங்கிலத்தில் பெயர். வெளிநாடுகளில் இதுபோன்ற  நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன் முதலாக திருச்சி  மாநகராட்சியில் தான் இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம்  புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த திறந்தவெளி  நூலகம் அமைக்கப்படுகிறது.

 மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்களிடம்  உள்ள பழைய புத்தகங்களை இங்கு வைத்து விட்டு செல்லலாம். இந்த நூலகம்  அமைப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் இது  திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

மூலக்கதை