தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
சென்னையில் முதல் நாள் காலையில் துவங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. 2-வது நாளும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்கிறது.
புறநகரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவொற்றியூரில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை தொடர்வதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் நீடிக்கும் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் பொய்கை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம், , கோடியக்கரை, செம்போடை போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது அதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தொடர்மழை காரணமாக அங்கு உள்ள இந்திரா நகர் குளம் நிரம்பிவழிகிறது.
இதனால் மழைநீர் ஊருக்குள் புகுந்து உள்ளது. பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும், அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் கடைகளிலும் வெள்ளம் புகுந்து உள்ளது.
அக்டோபரிலேயே துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை வானிலை மாற்றங்களால் தள்ளிப் போனது. தாமதமாக 1-ந் தேதி, பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் முதல் நாளே பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.