பராமரிப்பின்றி இருக்கும் புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் புத்தர் சிலையை தொல்லியல் துறை எடுத்துப் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, சின்னசேலம், கச்சிராய பாளையம் உள்ளிட்ட இடங்களில் பண்டைய மன்னர்கள் ஆண்டதற்கான புராதன வரலாறு, கல்வெட்டுக்கள், பண்டைய கோயில்கள், புராதன சிலைகள் என ஏராளம் உண்டு.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புகூட தச்சூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில்  பூமியில் இருந்து சாமி சிலைகள் மேலெழுந்தது குறிப்பிடத் தக்கது.

அதைப்போல சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில், சிவன் கோயில்  உள்ளது.

 இந்த பகுதியை கடந்த 12 ம் நூற்றாண்டில் வாணகோவராயன் என்ற குறுநில மன்னர் ஆறகழூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் சோழ மன்னரான  மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும் இருந்துள்ளார்.

இவர் சைவம், வைணவம், பவுத்தம், சமணம் ஆகிய மதங்களை ஆதரித்து உள்ளார். இந்த வாணகோவராயன் என்ற மன்னன் உலகியநல்லூரில் சிவன், பெருமாள் கோயிலை கட்டியதுடன், புத்தர் கோயிலையும் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உலகியநல்லூர் கிராமத்தில் சிவன் கோயில், பாழடைந்த பெருமாள் கோயில் இவற்றுக்கு இடையில் உள்ள விவசாய நிலத்தில் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய 4 அடி உயர புத்தர் சிலை சம்மணமிட்டு உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலையைச் சுற்றி புற்கள் முளைத்தும், பூமியில் பாதி அளவு மறைந்தும் உள்ளது. இந்த புராதன சிலையின் பெருமை தெரியாத இந்த பகுதி மக்கள் புத்தர் சிலையின் கழுத்தில் கயிறு கட்டி மாடு மேய்க்கின்றனர்.

இந்த சிலையை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் வெங்கடேசனும் நேரில் வந்து ஆய்வு செய்து 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை இது என்பதை உறுதி செய்து உள்ளார்.  ஆகையால் மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகிய நல்லூரில் உள்ள புத்தர் சிலையை போன்று உள்ள சிலைகளை எடுத்து சென்று பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மூலக்கதை