அழுகை சத்தம் பிடிக்காததால் ஆத்திரம் 4 வார குழந்தையை கொன்ற தாய்: குளியல் அறையின் தண்ணீரில் மூழ்கடித்த கொடூரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அழுகை சத்தம் பிடிக்காததால் ஆத்திரம் 4 வார குழந்தையை கொன்ற தாய்: குளியல் அறையின் தண்ணீரில் மூழ்கடித்த கொடூரம்

அரிசோனா: அரிசோனாவில், 4 வார குழந்தையின் அழும் சத்தம் பிடிக்காத தாய், இன்டெர்நெட்டை பார்த்து தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண் ஜென்னா என்பவருக்கு, கடந்த 4 வாரங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஜென்னாவுக்கு குழந்தை அழும் சத்தம் பிடிக்காததால், கடந்த சில நாட்களாக ‘குழந்தையை கொலை செய்வது எப்படி?, காணாமல் போன குழந்தைகள், குழந்தைகளை கொலை செய்த பெற்றோர்’ என்று குழந்தையை கொலை செய்வதற்கான முறைகளை இணையதளத்தில் தேடியுள்ளார்.

அதில் கிடைத்த தகவல்களின்படி, குழந்தையை கொல்ல  திட்டமிட்டார். அதன்படி, பிறந்து 4 வாரங்களே ஆன தனது குழந்தையை குளியல் அறையில் உள்ள தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.



பின்னர், குழந்தையை காணவில்லை என்று உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ஜென்னாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார்.

ஜென்னாவின் பதில்களில் சந்தேகமடைந்த போலீசார், ஜென்னாவின் வீட்டிற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, குழந்தையின் சடலத்தை வீட்டிலேயே கண்டெடுத்துள்ளனர்.

குளியல் அறையில் குழந்தையை கொன்றதும் உறுதி செய்யப்பட்டது. பின்னர், ஜென்னாவை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

உலகத்தில் குழந்தை இல்லாமல் பலரும் அவதிபட்டும் வரும் நிலையில், ஜென்னா தனது குழந்தையின் அழுகை சத்தம் பிடிக்காமல், தானே தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை