ப்ரீ-கேஜி வகுப்புகள் தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி ப்ரீ-கேஜி வகுப்புகளை தொடங்கும் முயற்சிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை தொடங்கி உள்ளது.

 அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றால் இதுவரை 1ஆம் வகுப்பில் தான் சேர்க்க முடிந்தது. அந்த நிலையை  ப்ரீ-கேஜி ஆக்குவதற்கான முயற்சியை பள்ளிக் கல்வித்துறை அங்கன்வாடிகள் மூலமாக செயல்படுத்த உள்ளது

துள்ளிக் குதிக்கும் மழலையரின் பாதங்கள் இனி அரசு பள்ளிகளிலும் விளையாடும் என்கிறது பள்ளிக் கல்வித்துறை. அதன் முதல் படியாக அங்கன்வாடிகள் உட்பட எல்லா வித தொடக்கப் பள்ளிகளிலும், பள்ளி முன் பருவ வகுப்புகளுக்கு (ப்ரீ- கேஜி.)ஒரே பாடத் திட்டத்திற்கான வரைவை மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.

பள்ளி முன் பருவ பாடத்திட்டத்தின் படி 2 முதல் 3 வயதிலான குழந்தைகள் ப்ரீ- கேஜி வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். 3 முதல் 4 வயதிலான குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும் 4 முதல் 5 வயதிலான குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்படுவார்கள்.

வகுப்புகள் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 3:45 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை 11 மணி முதல் 11-10 மணி வரை சிற்றுண்டி நேரமும், மதியம் 12-10 முதல் 1 மணி வரை மத்திய உணவு நேரமும் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பிற்பகல் 1முதல் 3 மணி வரை உறங்குவதற்கும், 3 முதல் 3- 20 வரை விளையாட்டு மற்றும் சிற்றுண்டி நேரமும் வழங்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள பள்ளி முன்பருவ வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக வகுக்கப்பட்டுள்ள இத்தகைய வரையறைகள் 2 வயது முதலான குழந்தைகளுக்கு ஏற்றது தானா என்ற  கேள்வி எழுந்துள்ளது.

 அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கைக்கான நுழைவு வகுப்பு 1 ஆம் வகுப்பில் இருந்து என்பதை ப்ரீ- கேஜி ஆக்கப்படுமா?  9:30 மணி முதல் 4 மணி பள்ளி என்பது 2 வயதான குழந்தைகளுக்கு சாத்தியமா? என்பது போன்ற கேள்விகளை கல்வியாளர்கள் எழுப்பியுள்ளனர்.

 இது குறித்து பள்ளிக்கல்வித் துறையிடம் கேட்டபோது 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 மணி நேரங்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று நேரத்தை பெற்றோர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.      

மூலக்கதை