இந்திய மீனவர்கள் 16 பேர் பாகிஸ்தான் அரசால் கைது: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
இந்திய மீனவர்கள் 16 பேர் பாகிஸ்தான் அரசால் கைது: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு

அகமதாபாத்: இந்திய மீனவர்கள் 16 பேர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் தங்கள் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக இந்திய மீனவர்களை கைது செய்தனர். இதைதொடர்ந்து மீனவர்களின் விசைப்படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கராச்சி நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தன்று, நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக 27 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை