தசரா பண்டிகையில் விநோதம்: தடியால் தாக்கி ரத்தம் சிந்தும் திருவிழா...38 பக்தர்கள் படுகாயம்

தினகரன்  தினகரன்
தசரா பண்டிகையில் விநோதம்: தடியால் தாக்கி ரத்தம் சிந்தும் திருவிழா...38 பக்தர்கள் படுகாயம்

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், தேவரகட்டு மலைக்குன்று மீது பழமையான மாலமல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை நிறைவு நாளன்று பக்தர்கள் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டு ரத்தம் சிந்தும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு இந்த திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தேவரகட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை துவங்கிய விழா நேற்று வரை நடந்தது.திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இரும்பு கூம்புகள் பொறுத்தப்பட்ட தடிகளை பயன்படுத்தி ஒருவரை மற்றவர் தாக்குவது வழக்கம். அப்போது ஏற்படும் காயத்தில் இருந்து சொட்டும் ரத்தத்தை புராண காலத்தில் அந்த பகுதியில் இறைவன் வதம் செய்ததாக கூறப்படும் ராட்சனுக்கு சமர்ப்பிப்பார்கள். அதன்படி தொடங்கிய திருவிழாவில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 38 பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்தவர்கள் அலூரு மற்றும் ஆதோனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பிரதாயம் என்ற பெயரில் நடக்கும் இந்த விநோத நிகழ்வில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் சுமார் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மூலக்கதை