திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தற்போது ஐப்பசி மாதமாக இருந்தாலும், நேற்று புரட்டாசி மாத 5வது சனிக்கிழமை என்பதால், தசரா மற்றும் வார விடுமுறை காரணமாகவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். அவர்கள் இலவச தரிசனம், ₹300 டிக்கெட், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 98 ஆயிரத்து 230 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று அதிகாலை முதல் சர்வ தரிசனமான இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டத்தில் உள்ள 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பி எம்எஸ்சி மேம்பாலம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அலிபிரி வாரிமெட்டு மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டிக்கெட் மற்றும் ஆதார் அட்டை மூலம் நேரம் நிர்ணயிக்கப்படும் திட்டமும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையான் கோயிலில் நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ₹1.66 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.