இந்தியாவின் முதல் மெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்.,
பெங்களூரு: இந்தியாவில், முதன் முறையாக, வலைதளங்களில் புழங்கும் பிட்காய்ன் போன்ற மெய்நிகர் கரன்சிகளை வழங்கும், ஏ.டி.எம்., திறக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி, மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்கு தடை விதித்துள்ளது. எவ்விதமான கட்டுப்பாட்டு அமைப்பின் கீழும் வராத, இந்த மெய்நிகர் கரன்சிகள்,முதலீட்டிற்கு பாதுகாப்பானவை அல்ல என்பது தான் அதற்கு காரணம்.எனினும், ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி, யுனோகாய்ன் எனும், மெய்நிகர் கரன்சி சந்தை, முதன் முதலாக பெங்களூரில், பிரத்ேயக ஏ.டி.எம்.,யை திறந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாத்விக் விஸ்வநாத் கூறியதாவது:யுனோகாய்ன் சந்தையில் பதிவு செய்து, மெய்நிகர் கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் வசதிக்காக, ஏ.டி.எம், திறக்கப்பட்டுள்ளது.இந்த, ஏ.டி.எம்.,மில், குறைந்தபட்சம், 1,000 ரூபாய் டிபாசிட் செய்யலாம்; திரும்ப எடுக்கலாம். டிபாசிட் செய்தோர், மொபைல்போன் மூலம், யுனோகாய்ன் வலைதளத்தில், பிட்காய்ன் உள்ளிட்ட மெய்நிகர் கரன்சிகளை வாங்கலாம்.வாங்கிய கரன்சிகளை விற்று, பணமாக்க விரும்பினால், அது குறித்து, வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு, 12 இலக்க எண் மற்றும் ஒருமுறை கடவுச் சொல் வழங்கப்படும். அதை, ஏ.டி.எம்.,மில் உள்ளீடுசெய்து, ரொக்கப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.எனினும், ஒரு நாளில் நடைபெறும் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு உள்ளது.இதுபோன்ற இயந்திரங்களை, விரைவில், டில்லி, மும்பையிலும் நிறுவ திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சட்டப் பிரச்னையா? : மெய்நிகர் கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எவ்வித சேவையும் வழங்கக் கூடாது என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. யுனோகாய்ன், வங்கிச் சேவையை பயன்படுத்தாமல், மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்கு, ஏ.டி.எம்.,யை நிறுவியுள்ளது. அதனால், இதில் சட்டப் பிரச்னை ஏதும் வராது என, நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்.
காசிப் ராஜா நிறுவனர், கிரிப்டோ காணுான்