அதிகாரம் எங்களிடம் தான் இருக்கணும்! : தனி பணப்பட்டுவாடா அமைப்புக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு
மும்பை: சுதந்திரமான பணப் பட்டுவாடா மற்றும்தீர்வுகளுக்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசு உயர்மட்ட குழுவின் பரிந்துரைக்கு, ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது.மத்திய அரசு, நிதித் துறை சார்ந்த பணப் பட்டுவாடா செயல்பாடுகளை, சர்வதேச தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.
ஒழுங்குமுறை வாரியம் : இதையொட்டி, 2017, நிதிச் சட்டத்தின் கீழ், 2007ல் பணப் பட்டுவாடா மற்றும் தீர்வை சட்டப் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில், பணப் பட்டுவாடா ஒழுங்குமுறை வாரியம் அமைக்க, இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.இந்நிலையில், மத்திய அரசு, இந்த சட்ட திருத்தம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், எஸ்.சி.கார்க் தலைமையிலான குழுவை அமைத்தது.இக்குழு, பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கையை, கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் வழங்கியது.அந்த அறிக்கையில், நிதித் துறை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தனியாக, பணப் பட்டுவாடா ஒழுங்குமுறை வாரியம் அமைக்க வேண்டும். அதன் தலைவரை, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு நியமிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணப்பட்டுவாடா மற்றும் தீர்வுக்கான வரைவு மசோதாவையும், குழு அளித்துள்ளது. இதன் மூலம், நிதித் துறையில் போட்டித் திறன் அதிகரித்து, நுகர்வோருக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும்.பணப் பரிவர்த்தனை செயல்பாடுகளில், ஸ்திரத்தன்மை ஏற்படும். எத்தகைய இடர்பாடுகளுக்கும் உடனடியாக தீர்வு கண்டு, இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும் என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரம் : இந்நிலையில், தன் கட்டுப்பாட்டில் இருந்து, பணப் பட்டுவாடா சார்ந்த செயல்பாடுகள் பிரிக்கப்படுவதை ரிசர்வ் வங்கி விரும்பவில்லை.இது குறித்து, ரிசர்வ் வங்கி, உயர்மட்டக் குழுவிடம் அளித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய மசோதாவை ரிசர்வ் வங்கி எதிர்க்கவில்லை. அதில், பணப் பட்டுவாடா நடைமுறையை கட்டுப்படுத்துவது, மேற்பார்வையிடுவது உள்ளிட்டவை தொடர்பான அதிகாரம், ரிசர்வ் வங்கியிடமே இருக்கும் அம்சம் சேர்க்கப்பட வேண்டும்.ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் தான், பணப் பட்டுவாடா வாரியம் செயல்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் கீழ், பணப் பட்டுவாடா மற்றும் தீர்வு நடைமுறைகள் இருக்கும்பட்சத்தில், பல்வேறு பயன்கள் கிடைக்கும்.இந்தியாவில்,ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள, பணப் பட்டுவாடா நடைமுறையில், திறன் குறைவாக உள்ளது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. பணப்பட்டுவாடா, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில், இந்தியா, சிறப்பாக முன்னேறி வருவதற்கு, சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதனால், சிறப்பாக செயல்படும் பிரிவில் எவ்வித மாற்றமும் செய்ய தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை அதிகரிக்கும் : உலகளவில், வங்கிகள் வெளியிடும், ‘டெபிட், கிரெடிட்’ போன்றவற்றுக்கு, இரட்டை கட்டுப்பாட்டு அமைப்புகள் தேவையில்லை. இந்தியாவில், பணப்பட்டுவாடாவில், வங்கிகள் தான் பிரதானமாக உள்ளன.அதனால், வங்கிகளை கண்காணிக்கும், ரிசர்வ் வங்கியின் கீழ், பணப் பட்டுவாடா அமைப்பும் கொண்டு வரப்பட வேண்டும். ஒரே அமைப்பின் கீழ் இருந்தால், பணப்பட்டுவாடா செயல்பாடுகள் மீது, பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கி அறிக்கை