ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதம் 8ம் தேதிமுதல் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 79 நகராட்சிகளில் 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். இதனால் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை