புதிய பொருளாதார ஆலோசகர் ஓரிரு மாதங்களில் நியமிக்கப்படுவார்
புதுடில்லி: மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர், அடுத்த ஓரிரு மாதங்களில் நியமிக்கப்படுவார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த, அரவிந்த் சுப்ரமணியன், ஜூன் மாதம், தன்னுடைய பதவியை சொந்த காரணங்களுக்காக, ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஏற்றுக் கொண்டார்.
கடந்த, 2014ல்,தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார், அர்விந்த் சுப்ரமணியன்.அவருடைய மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும், மேலும் ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்பே, ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் அவர்.இதையடுத்து, இப்பதவிக்கு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான, பிமல் ஜலான் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது.இக்குழுவானது, தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து கொடுத்து, அதன்பின், ஓரிரு மாதங்களில் புதிய ஆலோசகர் நியமிக்கப்படுவார் என, தெரிகிறது.