தொடர் மழை எதிரொலி; முட்டை விலை உயர்வு
நாமக்கல் : புரட்டாசி மாதம் முடிவு, தொடர் மழையால், நுகர்வு அதிகரித்து, முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. தமிழகத்தில், புரட்டாசி மாத விரதத்தால், நுகர்வு மற்றும் விலையும் சரிந்தது. கடந்த, 15ல், 370 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று, 15 காசு உயர்த்தப்பட்டு, 385 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: புரட்டாசி விரதம் முடிந்த நிலையில், நுகர்வு அதிகரித்துள்ளது. மேலும், ஐதராபாத் மண்டலத்தைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில், கொள்முதல் விலை குறைவால், பீஹார், மும்பை, கோல்கட்டா மாநிலங்களுக்கு, தினமும், 30 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, தமிழகத்தில் தொடர் மழையால், முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டே, கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.