மொபைல் போன் சேவையை திடீரென நிறுத்த தடை; தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்
புதுடில்லி : தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் போன் சேவையை நிறுத்துவதற்கு முன், குறைந்தது, 30 நாட்களுக்கு முன்னதாக, வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதிமுறை அமலுக்கு வர உள்ளது.
சில மாதங்களுக்கு முன், ‘ஏர்செல்’ நிறுவனம் திடீரென மொபைல் போன் சேவையை நிறுத்தியதால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தொலை தொடர்பு சேவை நிறுத்தம் தொடர்பான விதிமுறைகளை, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கியுள்ளது. இதற்கு, தொலை தொடர்பு ஆணையம், ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்புதல் :
இது குறித்து, தொலை தொடர்பு துறை செயலர், அருணா சுந்தரராஜன் கூறியதாவது: தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அளித்த பரிந்துரைகளுக்கு, தொலை தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மொபைல் போன் சேவை வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவும், அதேசமயம், தொழில் செய்வதை மேலும் சுலபமாக்கவும், புதிய விதிமுறைகள் வழி வகை செய்யும்.
ஒரு நிறுவனம், தொலை தொடர்பு சேவையை நிறுத்துவதானால், 30 நாட்களுக்கு முன், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும். அதுவே, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் அலைவரிசை உரிம நிறுவனங்களுக்கு, 60 நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும் என, புதிய விதிமுறை கூறுகிறது.
ஒரு நிறுவனம், குறிப்பிட்ட தொழில்நுட்ப சேவையை மூடும்பட்சத்தில், அதன் வாடிக்கையாளர், அதே எண்ணில், அதே நிறுவனத்தின் வேறு சேவைக்கு மாற விண்ணப்பிக்க தேவையில்லை. எனினும், ஒரு நிறுவனம், அனைத்து சேவைகளையும் நிறுத்தும்பட்சத்தில், அதே மொபைல் எண்ணில் வேறு சேவைக்கு மாறலாம்.
உரிமம் :
ஒரு நிறுவனம், அதன் தொலை தொடர்பு சேவைகளில், ஒரு பிரிவை மட்டும் மூட விரும்பினால், மொத்த சேவைகளுக்கான அலைவரிசை உரிமத்தை திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை என, புதிய விதிமுறை தெரிவிக்கிறது. இதற்காக, உரிமத்தில் திருத்தம் மட்டும் செய்தால் போதும். ஒரு நிறுவனம், அதன் உபரி அலைவரிசையை, வர்த்தக நோக்கில் வேறு ஒரு தொலை தொடர்பு சேவை நிறுவனத்திற்கு வழங்கினால், அது அமலுக்கு வருவதற்கு, 45 நாட்களுக்கு முன், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
அலைவரிசை உரிமம் முழுவதையும் விற்கும்பட்சத்தில், அது குறித்து, 60 நாட்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும் என, விதிமுறை தெரிவிக்கிறது. இந்த இரு அம்சங்களையும், முறையே, 15 நாள் மற்றும் 21 நாள் ஆக குறைக்க வேண்டும் என, தொலை தொடர்பு துறை வலியுறுத்த உள்ளது. தொலைதுாரத்தில் உள்ளோருக்கும், இணைய சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, உயர் அலைவரிசையை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, சலுகை வழங்கப்படும்.
இந்நிறுவனங்களின் அகண்ட அலைவரிசை பயன்பாட்டு கட்டணத்தை குறைக்க, ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதனால், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, குக்கிராமங்களுக்கும் இணைய சேவை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கிராமங்களில் இணைய வசதி :
மத்திய அரசு, 2019 மார்ச்சுக்குள், 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், கண்ணாடி நாரிழை கம்பி வடம் மூலம், இணைய வசதி ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான, ‘பாரத்நெட்’ திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கோரிய கூடுதல் தொகைக்கு, தொலை தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.