கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி : தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி - திருவனந்தபுரம் செல்லும் அரசு பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளும் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் களியக்காவிளையில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காததால் ரயில் மூலமாக பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவிற்கு காய்கறிகளை எடுத்துச் செல்லும் லாரிகளும் களியக்காவிளை சோதனை சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கேரளாவிற்கு செல்லும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளன.முன்னதாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல் முறையாக நேற்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. வரும் 22–ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இந்நிலையில் முதல் நாளே சபரிமலை செல்வதற்காக ஏராளமான இளம் பெண்கள் பல்வேறு வாகனங்களில் வந்தனர். அவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு போராட்டம் வலுத்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நேற்று சபரிமலை சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலக்கல், பம்பை, ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு என்ற பெயரில் வாகனங்களை யாராவது தடுத்து நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில காவல்துறை டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.