கல்லூரியில் கொடூர தாக்குதல்: 20 பேர் பலி! 68 பேர் படுகாயம்

PARIS TAMIL  PARIS TAMIL
கல்லூரியில் கொடூர தாக்குதல்: 20 பேர் பலி! 68 பேர் படுகாயம்

கிரிமியாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் குறித்த வீடியோவும், அதிர்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டன.
 
கிரிமியாவில் Vladislav Roslyakov என்ற 18 வயதான மாணவர், துப்பாக்கி மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கரமான தாக்குதல் நடத்தியதோடு, கல்லூரி உணவு விடுதியிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்த போனார்.
 
உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த கொடூர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 5 பேர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதாவதும் கூறியுள்ளனர்.
 
தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதிபர் புதினால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
தாக்குதலில் Vlad மட்டுமே ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், மேலும் ஒரு நபர் ஈடுபட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து Vlad-ன் வகுப்பு மாணவர் ஒருவர் கூறுகையில், திங்கட்கிழமையன்று Vlad பள்ளிக்கு வருகை தரவில்லை. ஒருவேளை அவன் முன்னாள் காதலியை சந்திக்க சென்றிருக்கலாம். அந்த பெண் மீது இருந்த ஆத்திரத்தில் தான் இப்படி செய்திருக்கலாம் என தெரிவித்தார்.
 
மற்றொரு மாணவர், Vlad அதிகமான கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் விளையாடுவான். அதற்கு அதிகமாக அடிமையாகி இருந்ததால், அதன் மீது இருந்த தாக்கத்தில் இப்படி செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்டவர்கள் அதிகமானோர் பெண்கள் தான். பெரும்பாலும் 15 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட 3 குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 20 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

மூலக்கதை