ஐசிசி ஊழல் தடுப்புக்குழு ஜெயசூரியா மீது வழக்கு

தினகரன்  தினகரன்
ஐசிசி ஊழல் தடுப்புக்குழு ஜெயசூரியா மீது வழக்கு

துபாய்: இலங்கை அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது ஐசிசி ஊழல் தடுப்புக் குழு வழக்கு பதிந்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகம் மீது சூதாட்டம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட்  கவுன்சில் ஊழல் தடுப்புக் குழுவினர் (ஏசியு) கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை அணியின் முன்னாள்  கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.இந்த நிலையில், ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக அவர் மீது வழக்கு பதிந்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல்,  இடையூறு ஏற்படுத்துவது அல்லது தாமதம் செய்தல், ஆவணங்களை சேதப்படுத்தல், மறைத்தல் அல்லது அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள்  ஜெயசூரியா மீது சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்து 2 வாரத்துக்குள்ளாக அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏசியு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை