வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து பத்திரிக்கைகளில் வெளியிடுவது கட்டாயம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து பத்திரிக்கைகளில் வெளியிடுவது கட்டாயம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி : வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளில் குறைந்தது மூன்று முறையாவது விளம்பரங்களாக வெளியிடுவது கட்டாயம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த மாற்றி அமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை தடுப்பதற்கு தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என சட்டம் இருந்தாலும், கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எண்ணிக்கை அரசியலில் அதிகரித்து வருவதால், இந்த சட்டத்தை மேலும் வலிமையாக்க வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுக்க உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்றும், நாடாளுமன்றம்தான் இதுகுறித்து உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை ஊடகங்களில் தெரியப்படுத்த வேண்டும், அதன்பின்னர் மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் 26ன் வடிவத்தை மாற்றி அமைத்தது. அதன்படி, பிரமாண பத்திரத்தில் பதிவு செய்த நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை அச்சு மற்றும் ஆடியோ-வீடியோ ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் குறைந்த பட்சம் மூன்று முறை இந்த தகவலை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த பிரமாண பத்திரத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் மீதான நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் உள்ளூரில் அதிக அளவில் விற்பனையாகும் செய்திதாள்களில் எழுத்தின் அளவு 12க்கு குறையாமல் பிரசுரம் செய்ய வேண்டும். வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் இருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரம் முன்பாக இந்த குற்றப்பின்னணி அறிவிப்பு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அனைத்தும் வருகின்ற ஐந்து மாநில தேர்தல்களில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. குற்றப்பின்னணி குறித்த விவரங்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களை சார்ந்துள்ள கட்சிகளும் வெளியிடவில்லை என்றால், கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்படத்தக்கது.

மூலக்கதை