வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்ற வெள்ளைப் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் கூறியதாவது:
"வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பூங்காவிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தத்தெடுக்கலாம்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் பூங்காவிலுள்ள அனு என்ற வெள்ளைப் புலியின் பாராமரிப்புக்காக சுமார் ரூ. 2 லட்சத்தை வழங்கி அதனை ஆறு மாதம் தத்தெடுப்பதாக தெரிவித்திருக்கிறார்” இவ்வாறு பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, "வனவிலங்குகளுக்கான அச்சுறுத்தல்களிலிருந்து அவற்றைப் பாதுகாப்பது நமது கடமை. எனவே பொதுமக்கள் விலங்குகளைத் தத்தெடுக்க முன்வர வேண்டும்" என்றார்.