நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து சுவீடன் பிரதமர் பதவியில் இருந்து நீக்கம்
ஸ்டாக்ஹோம் : சுவீடன் நாட்டு பிரதமர் ஸ்டீபன் லாஃப்வெனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சுவீடன் நாட்டு பிரதமராக 2014ம் ஆண்டு முதல் சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஸ்டீபன் லாஃப்வென் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக நேற்று சுவீடன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 204 ஓட்டுக்களும் எதிராக 142 ஓட்டுகளும் விழுந்தன. இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஸ்டீபன் லாஃப்வென் நீக்கப்பட்டார். இருப்பினும் புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை ஸ்டீபன் லாஃப்வென் இடைக்கால பிரதமராக நீடிபார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். சுவீடனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உல்ஃப் கிரிஸ்டெர்சனுக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிகிறது.