விவசாயிகள் எதிர்ப்பால் புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்

தினகரன்  தினகரன்
விவசாயிகள் எதிர்ப்பால் புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்

குஜராத்: மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இத்திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே மாதம் அடிக்கல் நாட்டினர். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால் தொய்வடைந்துள்ள புல்லட் ரயில் கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகமை என்ற அந்நாட்டு அரசு நிறுவனமானது விவசாயிகள் பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

மூலக்கதை