பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய சீனர்கள்..... படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

தினகரன்  தினகரன்
பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய சீனர்கள்..... படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

ஜின்ஜியாங்: சுட்டெரிக்கும் பாலைவனத்தை சுற்றுலாப்பயணிகளை கவரும் பூங்காவாக சீனர்கள் மாற்றியுள்ளனர். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் ஜிங்கி என்ற பகுதியில் 15 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது குபுகி பாலைவனம். சுட்டெரிக்கும் இந்த பாலைவனத்தை வெகுஜன மக்கள் விரும்பி வரும் சோலைவனமாக மாற்றி சீனர்கள் அசத்தியுள்ளனர். குழந்தைகளை கவரும் கார் பந்தயங்கள், மணல் சறுக்கு, ஒட்டக சவாரி என பொழுதுபோக்கு பூங்காவில் கிடைக்கும் அனைத்துவிதமான வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளுடன் ஏராளமானோர் இந்த பாலைவனத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். பாலைவனம் என்பதால் சில இடங்களில் மட்டுமே நீர்த்தேக்கம் இருக்கும். இதனால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை இளைப்பாற ஓய்விடங்கள், தண்ணீர் வசதி, உணவு விடுதிகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கற்பனைத்திறனுடன் பாலைவனத்தில் அமைந்துள்ள பூங்கா சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்லாது வியாபாரிகளுக்கும், ஒட்டக விவசாயிகளுக்கும் இந்த பூங்கா மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 66 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்த பாலைவன பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயில், எங்கு பார்த்தாலும் மணல்பரப்பு என்பதை மாற்றியமைத்து பாலைவனத்தையும் சுற்றுலாப்பயணிகளை கவரும் சோலைவனமாக மாற்றமுடியும் என சீனர்கள் நிரூபித்து காட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

மூலக்கதை