நியூசிலாந்து பிரதமரின் குழந்தைக்கு அடையாள அட்டை வழங்கி கவுரவப்படுத்திய ஐநா
நியூயார்க்: ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு குழந்தையுடன் வந்த பெண் தலைவர் என்ற வரலாற்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்டெர்ன் படைத்துள்ளார். பதவியில் இருந்தபோதே குழந்தை பெற்றுக்கொண்ட பெண் தலைவர் என்ற கவுரவத்தை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவிற்கு அடுத்தபடியாக ஜெசிந்தா அட்டெர்ன் பெற்றார். இவர் தற்போது நியூயார்கில் நடைபெற்று வரும் ஐநாவின் பொதுச்சபை கூட்டத்திற்கு தனது 3 மாத கைக்குழந்தையுடன் வந்து கலந்துகொண்டார். பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா வரலாறு படைத்துள்ளார். அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது.