இந்தியன் வங்கி சி.இ.ஓ.,வாக பத்மஜா சந்துரு நியமனம்
புதுடில்லி : சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரியாக, பத்மஜா சந்துரு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர பல்கலையில் பட்டம் பயின்ற இவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், சர்வதேச சந்தை பிரிவின், துணை நிர்வாக இயக்குனரான இவர், உடனடியாக, இந்தியன் வங்கியில் பொறுப்பேற்பார் என, மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு, 10 பொதுத் துறை வங்கிகளில், புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதில், பத்மஜா சந்துரு மற்றும் அவருடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், துணை நிர்வாக இயக்குனராக பணியாற்றிய, மிருத்யுன்ஜய் மகாபத்ராவும் இடம் பெற்றிருந்தனர். மிருத்யுன்ஜய் மகாபத்ரா, சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.