குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா அக். 10ல் துவக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா அக். 10ல் துவக்கம்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 5மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலாவும், காலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது.

தொடர்ந்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டும் வைபவம் நடக்கிறது. இரவு 9மணிக்கு சிம்மவாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது.

2ம்நாளான 11ம்தேதி இரவு 9மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்திலம் அம்மன் திருவீதியுலாநடக்கிறது. 3ம்நாளான 12ம்தேதி இரவு 9மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது.

 4ம்நாளில் இரவு 9மணிக்கு மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 5ம் நாளில் இரவு 9மணிக்கு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 6ம்நாளில் இரவு 9மணிக்கு சிம்மவாகனத்தில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது.

7ம்நாளில் இரவு 9மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 8ம்நாளில் இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 9ம்நாளில் இரவு 9மணிக்கு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், நடக்கிறது.

10ம்நாளான 19ம்தேதி காலை 10. 30மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 11மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும், இரவு 12மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பேரசுவரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது. 11ம்திருநாளில் அதிகாலை 1மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு சாந்தாபிஷேக ஆராதனை நடக்கிறது.

காலை 6மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதலும்,மாலை 4மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தலும், மாலை 4. 30மணிக்கு காப்புகளைதல், நள்ளிரவு 12மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 21ம்தேதி மதியம் 12மணிக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடக்கிறது.

மைசூருக்கு அடுத்தப்படியாக இங்குதான் தசரா விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை