ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று லீக் போட்டி : பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று லீக் போட்டி : பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

துபாய்:  பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 238 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் சோகைல், உஸ்மான் கான் நீக்கப்பட்டு முகமது ஆமிர், ஷதாப் கான்  இடம் பெற்றனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக், பகார் ஸமான் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் 8 ஓவரில் 24 ரன் சேர்த்தனர். இமாம் 10 ரன் எடுத்து சாஹல் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். பகார் ஸமான் 31  ரன் எடுத்து குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பாபர் ஆஸம் 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார். பாகிஸ்தான் அணி 15.5 ஓவரில் 58 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.இந்த நிலையில், கேப்டன் சர்பராஸ் அகமது - சோயிப் மாலிக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 107 ரன் சேர்த்தது. சர்பராஸ் 44 ரன் (66 பந்து, 2 பவுண்டரி) எடுத்து குல்தீப் சுழலில் ரோகித் வசம் பிடிபட்டார்.  சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த மாலிக் 78 ரன் (90 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பூம்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டார்.ஆசிப் அலி 30 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஷதாப் கான் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. முகமது நவாஸ் 15, ஹசன் அலி 2 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 29 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 10 ஓவரில் 41 ரன் கொடுத்து 2 விக்கெட், சாஹல் 9 ஓவரில்  46 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடா்ந்து ஆடிய இந்திய அணி 39.3 ஓவா்களில் 1 விக்கெட்டை இழந்து 238 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி கேப்டன் ரோகித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 119 பந்துகளை சந்தித்து 111 ரன்கள் எடுத்தார்.

மூலக்கதை