மாலத்தீவு அதிபராகிறார் இப்ராகிம் முகமது

தினமலர்  தினமலர்
மாலத்தீவு அதிபராகிறார் இப்ராகிம் முகமது

மாலி : மாலத்தீவில் எதிர்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித ஓட்டுகள் பெற்று ஆட்சியை பிடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடான, மாலத்தீவில், அதிபர் அப்துல்லா யாமீன் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று(செப்.,23) நடந்தது. ஆளும் கட்சியான மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் யாமீனும், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர். மொத்தம் 92 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டுப்பதிவு நிறைவடைந்தபின் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. இதில் எதிர்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்ராகிம் முகமது 1,33,808 ஓட்டுகளும், யாமீன் 95,526 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த இப்ராகிம் முகமது வெற்றி குறித்து தெரிவிக்கையில், மக்களின் விருப்பத்தை மதித்து, மென்மையாகவும், சமாதானமாகவும் அதிகாரத்தை மாற்ற யாமீனை அழைப்பதாக தெரிவித்தார்.

மூலக்கதை