தான்சானியாவில் ஏரியில் படகு கவிழ்ந்து 130 பேர் பரிதாப பலி
நைரோபி: தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை.தான்சானியாவில் விக்டோரியா என்ற பெயரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவிற்கு படகு மூலமாக நேற்று முன்தினம் பலர் பயணம் செய்தனர். 400க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் பயணம் செய்ததாக தெரிகிறது. அதிக பயணிகள் காரணமாக படகு எதிர்பாராத விதமாக ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினார்கள். சிலர் நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். நேற்று முன்தினம் 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். படகு கவிழ்ந்ததில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படகில் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான படகில் சோளமூட்டைகள், வாழைப்பழம் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட சரக்கு பொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.