முடங்கிய மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் புகார்கள்அதிகரிப்பு:கொசுமருந்து வாங்காமல் மோசடி நடந்தது அம்பலம்

தினமலர்  தினமலர்
முடங்கிய மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் புகார்கள்அதிகரிப்பு:கொசுமருந்து வாங்காமல் மோசடி நடந்தது அம்பலம்

மதுரை:மதுரை மாநகராட்சி சுகாதாரப்பிரிவில் அதிகாரிகளின் மெத்தனத்தால் நகர் சுகாதாரம் கேள்விக்குறியானதுடன் அன்றாட பணிகளுக்கான பைல்களில் ஒப்புதல் வாங்குவதற்கும் ஊழியர்கள் அலுவலகத்தில் தவம் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ்களில் உள்ள சிறு எழுத்துப்பிழைகள் உள்ளிட்ட சில திருத்தங்களை செய்யும் பணியை சுகாதாரப் பிரிவு செய்து வந்தது. சில மாதங்களுக்கு முன் உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன் இப்பணிகளை செய்து வந்தார். அவர் பணிமாற்றப்பட்ட பின் இந்த திருத்த பணிகள் நடக்கவில்லை. கெசட்டில் திருத்தங்களை செய்ய சுகாதார அலுவலர் சதீஷ் ராகவன் அறிவுறுத்துகிறார். இதற்கு மக்கள் பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு காத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட பைல்கள் முடங்கியுள்ளன. படிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளோர் தினமும் வந்து புலம்புகின்றனர்.மாநகராட்சி மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை, சப்ளை செய்த நிறுவனங்களுக்கு பணம் அனுப்புவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறமும், நகரில் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்து வந்த டாக்டருக்கு சம்பளம் வழங்காததால், அப்பணியும் நிறுத்தப்பட்டுள்ளன. கொசு மருந்து வாங்க கடந்தாண்டு ஒப்புதல் வழங்காததால் 'டெங்கு' பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். தற்போதும் அந்நிலை தொடர்கிறது.
இந்நிலையில் 2016 ல் சென்னையில் ஒரு நிறுவனத்தில் 6,40,485 ரூபாய்க்கு கொசு மருந்து வாங்கியதாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாகி ஹக்கிம் கூறுகையில், கொசு மருந்து வாங்கியது குறித்து நடந்த தணிக்கையின் போது பில்லில் குறிப்பிட்ட நிறுவனமே இல்லாமல், போலி பில் அடிப்படையில் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை