தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு கலெக்டர் தடை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு கலெக்டர் தடை!

தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்த தடை  விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா வரும் அக்.,11-ல் தொடங்கி 23 ந்தேதி வரை நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் விழா என்பதால் தாமிரபரணியில் நீராட  நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர உள்ளனர். 

தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல், கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் பல்வேறு தீர்த்தங்களில் இதற்கான பணிகள் நடந்துவருகிறது. பல்வேறு குழுக்கள் படித்துறைகளை சீரமைத்து வருகின்றனர். அரசு சார்பில் நெல்லை கலெக்டர் ஷில்பா தலைமையில் ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு வேறு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

இதற்கிடையில் நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணிக்கரையில் உள்ள முக்கியமான அனைத்து கோயில்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிக்கு செல்லும் பாதை போதுமான வசதி இல்லை. அங்கு அதிகமான பக்தர்கள்கூடுவதற்கும் இடவசதி இல்லை. பருவமழைக் காலத்தில் தாமிரபரணியில் அதிக தண்ணீர் செல்லும்போது நீராடுபவர்களை பாதுகாப்பதும் சிரமம். நெரிசலான அங்கு புஷ்கர விழா நடத்த இயலாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

மேலும் தைப்பூச மண்டபம் பகுதியிலும் தாமிரபரணி ஆழமாக உள்ளது. அங்கு நீர்ச்சுழல் இருப்பதால் பலர் மூழ்கி இறந்துள்ளனர்.அங்கு நீராடுவதற்கு ஏற்ற இடம் இல்லை. 

எனவே கலெக்டரின் உத்தரவின்படி கோயில் மண்டபங்கள், படித்துறைகளை புஷ்கர விழாவிற்கு வழங்க வேண்டாம் என கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆலோசனையின் பேரில், புஷ்கர விழாவிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டாம் என தெரிவித்திருப்பது புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்து வருபவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

மூலக்கதை