ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம்
புதுடில்லி : அடுத்த வாரம், மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 2,264 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளன.
சர்வதேச வர்த்தகப் பதற்றம், கச்சா எண்ணெய் விலையேற்றம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இந்நிலையில், இந்த மூன்று நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பது, அடுத்த வாரம் தான் தெரியும்.
நடப்பு வாரம், பொதுத் துறையைச் சேர்ந்த, இர்கான் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. பங்குகள் வேண்டி, 9.9 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அடுத்த வாரம், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, 24ம் தேதி துவங்கி,26ல் முடிவடைகிறது.
பங்கு ஒன்றின் விலை, 115 – 118 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனமான, ‘ஆவாஸ் பைனான்சியர்ஸ்’ பங்கு விற்பனை மூலம், 1,734 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இப்பங்கு வெளியீடு, 25 – 27வரை நடைபெற உள்ளது. அடுத்து, தினேஷ் இன்ஜினியர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டிற்கு வருகிறது. இந்நிறுவனம், பங்கு விலையை, 183 – 185 ரூபாய் என, நிர்ணயித்துள்ளது.
ஒரு கோடி பங்குகளை விற்பனை செய்து, அதிகபட்சம், 185 கோடி ரூபாய் திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடப்பு செப்டம்பரில், நான்கு நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 2,734 கோடி ரூபாய் திரட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்தில், ஏழு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 16,665 கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது.