விவசாயிகளுக்கு வாடகை டிராக்டர்; ‘டாபே’ நிறுவனம், ‘ஆப்’ வெளியீடு
புதுடில்லி : சென்னையைச் சேர்ந்த, ‘டாபே’ நிறுவனம், விவசாயிகளுக்கு டிராக்டர், வேளாண் சாதனங்கள் ஆகியவற்றை, வாடகைக்கு பெறும் வசதியை செய்து கொடுத்துள்ளது.
இது குறித்து, டாபே நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறியதாவது: நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் ஒன்றாக, டிராக்டர், வேளாண் சாதனங்கள் ஆகியவற்றை, விவசாயிகள் வாடகைக்கு பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ‘ஜேபார்ம் சர்வீசஸ்’ என்ற இலவச மொபைல் போன், ‘ஆப்’ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆப் மூலம், சாகுபடிக்கு தேவையான டிராக்டர், நவீன தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை, விவசாயிகள் வாடகைக்கு பெறலாம்.
இது, நவீன வேளாண் சாதனங்கள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய வசதிகளை பெற முடியாத விவசாயிகளுக்கு, பேருதவியாக இருக்கும். விவசாயிகள் வருவாயை, 2022ல் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற, பிரதமரின் திட்டத்திற்கும் வலு சேர்க்கும். விவசாயிகள், ‘ஆப்’பை மொபைல் போனில் பதிவிறக்கி, தங்களிடம் உள்ள டிராக்டர், வேளாண் சாதனங்கள் உள்ளிட்ட விபரங்களை அளிக்கலாம். அதுபோல, தங்களுக்கு தேவைப்படும் வேளாண் சாதன விபரங்களையும் வெளியிடலாம்.
குஜராத் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், சோதனை அடிப்படையில் செயல்படுத்திய இத்திட்டத்தில், 60 ஆயிரம் பேர் இணைந்து, 1 லட்சத்திற்கும் அதிகமான, ‘ஆர்டர்’களை வழங்கியுள்ளனர். தற்போது, நாடு முழுவதும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த ஆப் மூலம், வானிலை நிலவரம், வேளாண் பொருட்கள் விலை, வர்த்தகம் உள்ளிட்ட தகவல்களையும் இலவசமாக பெறலாம். மொபைல் போன் இல்லாதவர்கள், இலவச அழைப்பு எண்ணை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.