‘ப்ளூடார்ட்’ நிறுவனத்தின் புதிய இலக்கு
சென்னை : ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனமான, ‘ப்ளூடார்ட்’ இந்தாண்டு இறுதிக்குள், தன் சேவைக்கு, 20 ஆயிரம் அஞ்சல் குறியீடுகளை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ப்ளூடார்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், அனில் கண்ணா இது குறித்து கூறியதாவது: இந்தாண்டின் துவக்கத்தில், எங்கள் சேவையை, 6,000 அஞ்சல் குறியீடுகளிலிருந்து, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு விரிவுப்படுத்தியுள்ளோம். ஆண்டின் முடிவுக்குள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு சேவையை விரிவுப்படுத்த உள்ளோம். செப்., மாதம் வரை, பல்வேறு மாநிலங்களில் உள்ள, 16 நகரங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ப்ளூ டார்ட் நிறுவனம், 100 சதவீத சேவையை வழங்கியுள்ளது.
அரசின், ‘மேக் இன் இந்தியா’ இலக்கு மற்றும் பல்வேறு மாநில முன் முயற்சிகளுக்கு உட்பட்டு, வர்த்தகத்தை மேலும் எளிதாக்கி, நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரித்தலே எங்கள் நிறுவனத்தின் செயல்திட்டம். விரைவில், 939 புதிய மையங்களை கிராமப்புறங்களில் துவங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.