அதிர்ச்சி தந்த பங்குச்சந்தை வீழ்ச்சி; 1,000 புள்ளிகள் சரிவு
மும்பை : நேற்று, வீட்டு வசதி கடன் நிறுவன பங்குகள் விலை சரிவால், பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே, ‘சென்செக்ஸ்’ 1,000 புள்ளிகள் சரிந்தது.
இரண்டு நாட்களாக, கச்சா எண்ணெய் விலை குறைந்து, ரூபாய் வெளிமதிப்பு ஏற்றம் கண்டதை அடுத்து, நேற்று காலையில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது.
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., :
அதன் பின் ஏற்பட்ட சரிவிற்கு, அடிப்படை கட்டமைப்பு துறையைச் சேர்ந்த, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் வாராக் கடன் பிரச்னை முக்கிய காரணமாக அமைந்தது. இக்குழுமத்தின், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., தமிழ்நாடு பவர் நிறுவனம் மீது, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், திவால் நடவடிக்கை பணிகள் துவங்கியுள்ளன.
மேலும், இக்குழுமத்தின் வாராக் கடன் காரணமாக, அதன் கடன் தகுதி மதிப்பீட்டை, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ குறைத்துள்ளது. கடந்த இரு மாதங்களில், இரண்டு முறை மதிப்பீடு குறைக்கப்பட்டதால், இக்குழும நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது. ‘இந்தியா புல்ஸ்’ இந்நிலையில், வீட்டு வசதி கடன் துறையைச் சேர்ந்த, டி.எச்.எப்.எல்., நிறுவனத்தின் பங்கு விலை, திடீரென மளமளவென சரிவடைந்தது.
இந்நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்காமல் இழுத்தடிப்பதாக வெளியான தகவலால், இதன் பங்கு விலை, 60 சதவீதத்திற்கும் மேலாக குறைந்தது. இதனால், இந்நிறுவனம், அதன் சந்தை மூலதனத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாயை இழந்தது. இதன் தாக்கத்தால், வீட்டு வசதி கடன் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்கத் துவங்கினர்.
ரிசர்வ் வங்கி :
‘இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவன பங்கு விலை, 35 சதவீதம் சரிவடைந்தது. ‘கிருஹ் பைனான்ஸ், கேன் பின் ஹோம்ஸ், பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, முறையே, 17.66, 14.55 மற்றும் 9.23 சதவீதம் சரிவடைந்தன.இத்துடன், ரிசர்வ் வங்கி நடவடிக்கையால், யெஸ் பேங்க் பங்கும், 29 சதவீதம் சரிந்தது. இதனால், சென்செக்ஸ், 1,128 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டு, 36,000 புள்ளிகளுக்கும் கீழாக சரிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 368 புள்ளிகள் குறைந்து, 11,150 புள்ளிகளுக்கும் கீழாக இறங்கியது
நிதி நெருக்கடி :
இந்நிலையில், டி.எச்.எப்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடி குறித்து வெளியான தகவலை மறுத்தது. வலுவான நிதியாதாரத்துடன் உள்ளதாக நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, அதன் பங்கு விலை சரிவு தடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதர நிறுவனங்களின் பங்கு விலை சற்று உயர்ந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் ஓரளவு ஏற்றம் கண்டது. வர்த்தகத்தின் இறுதியில், 279.62 புள்ளிகள் சரிவுடன், 36,841.60 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 91.25 புள்ளிகள் சரிந்து, 11,143.10 புள்ளிகளில் நிலை பெற்றது.
ரூ.5.66 லட்சம் கோடி மாயம் :
கடந்த, நான்கு வர்த்தக தினங்களில், பங்கு விலை சரிவால், முதலீட்டாளர்கள், 5.66 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். நேற்று மட்டும், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், 2.02 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.