தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு அடுத்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படாது: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு அடுத்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படாது: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் நர்சிங் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமல்ல என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி, 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றது. அதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி தமிழக சட்டசபையில் முதுநிலை நீட், இளநிலை நீட் தேர்வுக்கு தமிழக மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறும் வகையில், 2 சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது.

மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்றுத்தரவில்லை. அதனால் அந்த மசோதாக்கள் சட்டமாகவில்லை.

 கடந்த 2 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில் நர்சிங் படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று நேற்று தகவல் பரவியது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தமிழக மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

அதனால் நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம்.

நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற தகவல் உண்மை அல்ல.

மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2022ம் ஆண்டு முதல் நீட் தேர்வை கட்டாயமாக்கலாமா என்று கருத்துக்கேட்டு மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு 2016ம் ஆண்டு கடிதம் எழுதியது.
தமிழகத்தில் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட எந்த படிப்புகளுக்கும், நீட் தேர்வு வேண்டாம் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

நர்சிங் படிப்புக்கு அடுத்த ஆண்டு நீட் கட்டாயமாக்கப்படாது. மாணவர்கள் இதுதொடர்பாக பயப்பட தேவையில்லை.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை