ஆசிய கோப்பை கிரிக்கெட்: காயம் காரணமாக பாண்டியா விலகல்...... தீபக் சஹார் அணியில் சேர்ப்பு

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: காயம் காரணமாக பாண்டியா விலகல்...... தீபக் சஹார் அணியில் சேர்ப்பு

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா எஞ்சிய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா நேற்று இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இப்போட்டியின் 18-வது ஓவரை வீசியபோது ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீசியபோது ஹர்திக் பாண்டியாவின் முதுகுப்பகுதியில் வலி  ஏற்பட்டதால் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியாததால் ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மருத்துவக்குழு அவரை பரிசோதனை செய்ததில் முதுகின் அடிப்பகுயில் காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் துபாய் சென்றடைவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை