கிரிக்கெட் வாய்ப்புக்காக நாடு நாடாக சுற்றும் கிரிக்கெட் வீரர்
துபாய்: ஹாங்காங் கிரிக்கெட் அணியின் கேப்டன் அன்ஷுமன் ராத். 20 வயதே ஆன இவர் இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இந்தியாவில் கிரிக்கெட் துறையில் வாய்ப்புக்கு கடுமையான போட்டி இருப்பதால் இவரது தந்தை இவரை அவர் சிறுவயது முதல் இங்கிலாந்தில் வளர்த்து வந்துள்ளார்.
ராத் இப்போது, ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் பொருளாதாரப் படிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர், ஹாங்காங் அணிக்காக ஆடியது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது : எங்க குடும்பம் இந்தியாவை விட்டு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. ஒடிசாதான் எங்க சொந்த ஊர். எங்க ஊருக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது.
2003 உலகக்கோப்பையில் இந்தியா நன்றாக ஆடியது. அதை பார்த்து நான் கிரிக்கெட் ஆடத் துவங்கினேன்.
எனது விருப்பத்தை அறிந்த எனது தந்தை எனக்காக பல்வேறு தியாகங்களை செய்ய ஆரம்பித்தார்.
இங்கிலாந்தில் பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்பில் சேர்ந்தேன்.
என் பெற்றோர் நான் கிரிக்கெட் மற்றும் படிப்பில் சேர்ந்தே முன்னேறுவதில் உறுதியாக இருந்தார்கள். எனினும், இங்கிலாந்தில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற சட்டங்கள் என்னை தொழில்முறை கிரிக்கெட் ஆட அனுமதிக்கவில்லை.
எனவே, நான் படிப்பை நிறுத்தி வைத்தேன். அடுத்ததாக ஹாங்காங் சென்று கிரிக்கெட் ஆட துவங்கினேன்.
இதற்காக சில நண்பர்கள் எனக்கு உதவினார்கள். ஹாங்காங் நாட்டில் பெரிய அளவில் வீரர்கள் இல்லாததால், ஹாங்காங் தேசிய அணியில் எளிதாக சேர்ந்து விட்டேன்.
இப்போது ஹாங்காங் அணிக்காக ஆடி வருகிறேன். எனது விருப்பம்,
ஆசை, லட்சியம் ஒன்றுதான் எங்கிருந்தாலும் நான் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது மட்டும்தான்.
எனது விருப்பத்தை அறிந்த நியூசிலாந்து வீரர்கள் என்னை அவர்களது அணிக்கு ஆட அழைத்துள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
எங்கு சென்று ஆடினாலும் என் பூர்வீகம் இந்தியாதான். வாய்ப்புக்காகத்தான் நான் நாடு நாடாக செல்கிறேன்.
இவ்வாறு ராத் கூறினார்.
.