'கெத்து' காட்டியது இந்தியா; பாக்.,கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஊதி தள்ளியது

தினமலர்  தினமலர்
கெத்து காட்டியது இந்தியா; பாக்.,கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஊதி தள்ளியது

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமது, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு பும்ரா, பாண்ட்யா சேர்க்கப்பட்டனர்.

புவனேஷ்வர் அசத்தல்:


பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. புவனேஷ்வரின் மூன்றாவது ஓவரில் இமாம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த புவனேஷ்வர் இம்முறை பகர் ஜமானை டக் அவுட்டாக்கினார். பின், இணைந்த பாபர் ஆசம், சோயப் மாலிக் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சகால் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பாபர். குல்தீப் பந்தை மாலிக் சிக்சருக்கு பறக்கவிட்டார்.

கைகொடுத்த குல்தீப்:


இவர்களை பிரிக்க குல்தீப் கைகொடுத்தார். இவரது 'சுழலில்' மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தபோது, பாபர் (47) சிக்கினார். ஜாதவ் பந்தில் கேப்டன் சர்பராஸ் (6) சரணடைந்தார். தொல்லை தந்த மாலிக் (43) ரன் அவுட்டானார். ஆசிப் அலி (9), ஷாதப் கானை (8) வெளியேற்றி இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார் ஜாதவ். பும்ரா 'வேகத்தில்' பகீம் அஷ்ரப் (21) சரிந்தார். புவனேஷ்வர் 'வேகத்தில்' ஹசன் அலி (1) திரும்பினார். உஸ்மான் போல்டாக, பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், ஜாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ரோகித் அரை சதம் :


எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ஆமிர் பந்துவீச்சில் ரோகித் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். உஸ்மான் ஓவரையும் விட்டு வைக்காத இவர், இரண்டு சிக்சர் பறக்கவிட்டார். தன் பங்கிற்கு பகீம் பந்தை தவான் பவுண்டரிக்கு விரட்டினார். வேகமாக ரன் சேர்த்த ரோகித் அரை சதம் எட்டினார். இவர் ஷாதப் சுழலில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். பகீம் பந்தில் தவான் (46) அவுட்டானார். ராயுடு ஒரு பவுண்டரி அடிக்க வெற்றி உறுதியானது. முடிவில், இந்திய அணி 29 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு (31), தினேஷ் கார்த்திக் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை