வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஸ்பீக்கர் பயன்பாடு: கமிஷனர் ஆஜராக வேண்டும்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஸ்பீக்கர் பயன்பாடு: கமிஷனர் ஆஜராக வேண்டும்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற நடவடிக்ைக எடுக்காவிட்டால் போலீஸ் கமிஷனர் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கவுரி சங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016ல் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்களை உபயோகிக்கத் தடை கேட்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.



இந்நிலையில் வழக்கு நேற்று நீதிபதி ஆர். மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீலிடம் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதே என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.   அதற்கு அரசு வக்கீல், பல இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றப்பட்டுள்ளன என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தாவிட்டால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்து விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

.

மூலக்கதை