அருண் ஜெட்லியுடனான பேரத்தால் விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
அருண் ஜெட்லியுடனான பேரத்தால் விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள கர்னூலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:–

பொதுத்துறை வங்கிகளின் ரூ.9 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையா ஒரு திருடன் என்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். ஆனால், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு தெரிந்தே அவர் தப்பி ஓடினார். ஏதோ ஒரு பிரதிபலனுக்காக அவர் தப்பிக்க அருண் ஜெட்லி அனுமதித்தார். அதற்காக அருண் ஜெட்லி–விஜய் மல்லையா இடையே ஒரு பேரம் உண்டானது.
அருண் ஜெட்லிக்கு தெரிந்தே விஜய் மல்லையா தப்பி ஓடியும், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிக்கிறார். அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அருண் ஜெட்லியை அவர் நீக்க வேண்டும்.

பிரதமர் மோடி, தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக் கொள்கிறார். ஆனால், இரவு நேரத்தில் திருடர்களுக்கு கதவு திறந்து விடும் காவலாளியாக அவர் இருக்கிறார்.
முந்தைய காங்கிரஸ் அரசு, தலா ரூ.526 கோடி மதிப்பில் ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க திட்டமிட்டது. ஆனால், அந்த விலையை மோடி அரசு தலா ரூ.1,600 கோடியாக உயர்த்தி உள்ளது. மேலும், அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை எந்த முன்அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்துள்ளது.

பிரதமர் எப்போதும் மேலே பார்க்கிறார். கீழே குனிந்து வலது புறமும், இடது புறமும் பார்க்கிறார். ஆனால், என் கண்களைப் பார்க்க மறுக்கிறார்.
மன்மோகன் சிங் அரசு, ஆந்திராவுக்கு 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முன்வந்தது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா, 10 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வாக்குறுதியை மீறி விட்டார்.

சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததுடன், ஆந்திர தலைவர்களை அவமரியாதை செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும். மேலும், விவசாய கடன்களை ரத்து செய்யும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
கர்னூலில், மறைந்த முன்னாள் முதல்–மந்திரி தாமோதரம் சஞ்சீவய்யா இல்லத்துக்கு ராகுல் காந்தி சென்றார். மற்றொரு முன்னாள் முதல்–மந்திரி கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், கர்னூலில், கல்லூரி மாணவர்களுடனான ராகுல் காந்தி சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதில், ஜி.எஸ்.டி., ரபேல் போர் விமான விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்பட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார்.

மூலக்கதை