தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது : டெல்லியில் மத்திய மந்திரியை சந்தித்த அமைச்சர் தங்கமணி பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது : டெல்லியில் மத்திய மந்திரியை சந்தித்த அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சில அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதினார். அதில், தமிழகத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், அதனால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏதுவாக மத்திய அரசு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லி வந்தார். அவர் பகல் 12 மணி அளவில் ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஷ்கோயலை ரெயில்வே அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் தமிழகத்துக்கான நிலக்கரி ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டுக்கு தினசரி 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் நமது மின் உற்பத்தித்திறன் (காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி இன்றி) 18 ஆயிரம் மெகாவாட் ஆகும். தமிழகத்தை இப்படி மின்மிகை மாநிலமாக ஜெயலலிதா உருவாக்கி இருந்தார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மின்வெட்டு என மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் எப்போதுமே மின்வெட்டு வராது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று மத்திய அரசு சமன்பாட்டு அறிக்கையிலும் தெரிவித்து இருக்கிறது.
மே மாத கடைசியில் இருந்து அக்டோபர் முதல் வாரம் வரை காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். அப்போது அனல் மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வோம். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் 3 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து திடீரென பூஜ்யமாகிவிட்டது.

இதனால் கடந்த 9 மற்றும் 10–ந் தேதிகளில் தமிழகத்தில் சுழற்சி முறையில் ½ மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் அடுத்த நாளே சகஜநிலை திரும்பிவிட்டது.

அனல் மின்நிலையங்களில் எப்போதுமே 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைத்திருப்போம். கடந்த வாரம் ஒடிசாவில் மழை பெய்ததால் நிலக்கரியை கொண்டுவருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் நிலக்கரி கையிருப்பு குறைந்துவிட்டது. தற்போது வடசென்னை அனல் மின்நிலையத்தில் 3 நாட்களுக்கும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கும் தேவையான நிலக்கரி இருக்கிறது.
எனவே தான் தற்போது மத்திய நிலக்கரித் துறை மந்திரியை சந்தித்து தமிழகத்துக்கு தினந்தோறும் தரக்கூடிய நிலக்கரி ரெயில் பெட்டிகளை 16 ஆக உயர்த்தி தரவேண்டும் என்றும், கையிருப்பை அதிகரிக்க 20 பெட்டிகளாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

இதனை ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரி பியூஷ் கோயல், தினமும் 16 பெட்டிகள் நிலக்கரியை தர ஒப்புக்கொண்டு இருக்கிறார். சூழ்நிலை சரியானதும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதிகரிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்துகொண்டிருப்பதால் தற்போது மின்சார தேவை குறைந்து இருக்கிறது. இதனால் தூத்துக்குடியில் 210 மெகாவாட், மேட்டூரில் 420 மெகாவாட் மின் உற்பத்தியை குறைத்து இருக்கிறோம். நிலக்கிரி இல்லாமல் குறைக்கவில்லை.

இது தெரியாமல் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கூட ஒரு நாளைக்கான நிலக்கரி கையிருப்பெல்லாம் இருந்திருக்கிறது. எனவே, இது சகஜனமானது தான். அவர்களது எதிர்பார்ப்பு வீணாகத்தான் போகப்போகிறது. நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் மின்வெட்டு வராது.
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு, ‘நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது, இந்தியாவில் இருக்கிற நிலக்கரியையே பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தது. அதன் அடிப்படையில் நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட்டு, மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் நிலக்கரி ஒதுக்கிவருகிறது.

சில நேரங்களில் இயற்கை சீற்றங்கள் காரணமாக நிலக்கரி வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் கையிருப்பு குறைந்துவிடுகிறது. தற்போது மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளதன் அடிப்படையில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் தமிழகத்துக்கு தேவையான நிலக்கரி வரத்தொடங்கிவிடும். அதன்பிறகு நிலக்கரி கையிருப்பு அதிகமாகிவிடும்.
நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதால் 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக நாங்கள் ஒப்பந்தம் போட இருக்கிறோம்.

உடனடியாக தூத்துக்குடிக்கு 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள நிலக்கரிக்கும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி மாலையில் மத்திய மின்சாரத் துறை மந்திரி ஆர்.கே.சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, ‘மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு 6,152 மெகாவாட் மின்சாரம் தரவேண்டும். ஆனால் தற்போது 3,300 மெகாவாட் மின்சாரமே வருகிறது. எனவே, 6,152 மெகாவாட் மின்சாரத்தையும் முழுமையாக தரவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்புகளின்போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் விக்ரம் கபூரும் உடன் இருந்தார்.

மூலக்கதை