3 தங்கம் வாங்கியும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை சோகத்தில் தங்கமங்கை; கண்விழித்துப் பார்க்குமா அரசு ?
சென்னை: புதுச்சேரி ஐயங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம். இவரின் 14 வயது மகள் ஆஷிகா.
ஆப்பிரிக்காவில் நடந்த சர்வதேச வலு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப்பதக்கங்களைத் வாங்கி குவித்துள்ளார். சர்வதேச வலு தூக்கும் சம்மேளனம் சார்பில் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 40 நாடுகள் பங்கேற்றன.
அதில், 43 கிலோ எடைகொண்ட சப்-ஜுனியர் பிரிவில், வெற்றிபெற்றதுடன், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றி, உலக நாடுகள் பார்வையை தன்பக்கம் திருப்பியுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில், சர்வதேச அளவிலான வலு தூக்கும் போட்டியில் இந்தியா பெற்றிருக்கும் முதல் தங்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு 3 தங்கம் வாங்கி பெருமை சேர்த்த இந்த வீராங்கனையை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 1975ம் ஆண்டு இந்திய வலு தூக்கும் சம்மேளனம் தொடங்கப்பட்டு, கடந்த 43 ஆண்டுகளில் சர்வதேச அளவில் நடைபெற்ற வலு தூக்கும் போட்டிகளில், இந்தியா தங்கம் வென்றதில்லை.
அந்த நிலையை மாற்றியிருக்கிறார் ஆஷிகா. இது மற்ற நாடுகளுக்குக் கிடைத்திருந்தால், அவர்கள் கொண்டாடி இருப்பார்கள்.
ஆனால், பதக்கம் வாங்கிய வீராங்கனை ஆஷிகாவை மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.