மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு; டிச., 10ம் தேதி தீர்ப்பு

தினமலர்  தினமலர்

லண்டன்: ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் டிசம்பர் 10ம் தேதி, லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

தொழிலதிபர் விஜய்மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார். அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பது தொடர்பாக வீடியோவை நீதிபதி ஆய்வு செய்தார். வீடியோவில் சிறை வசதிகள் தனக்கு திருப்தி அளிப்பதாக நீதிபதி கூறியதாக தெரிகிறது.

வசதிகள்:


மல்லையாவுக்காக ஒதுக்கப்பட்ட சிறை அறையில், 6 டியூப் லைட்டுகள், 3 மின்விசிறிகள், அட்டாச்டு பாத்ரூம், எல்.இ.டி., டிவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



நம்பிக்கை


ஆஜராக வந்த மல்லையா, நிருபர்களிடம் கூறுகையில், கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளேன். இதனை நீதிமன்றம் ஆலோசிக்கும் என நம்புகிறேன். நாடு கடத்துவது குறித்து முன்கூட்டியே ஏதுவும் கூற விரும்பவில்லை என்றார்.

மேலும் அவர், வங்கிக்கடன் பிரச்னையை தீர்ப்பதற்காக அருண் ஜெட்லியை லண்டன் வருவதற்கு முன்பு சந்தித்தேன். கடனை திருப்பி கொடுப்பது தொடர்பான கடிதத்திற்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்றார்.



10ல் தீர்ப்பு:


இந்நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தீர்ப்பு தேதியை அறிவித்தார். இதன்படி, டிசம்பர் 10ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை