சர்வதேச ஹாக்கியில் ஓய்வு சர்தார் சிங் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சர்வதேச ஹாக்கியில் ஓய்வு சர்தார் சிங் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங், சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 350க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள சர்சார் (32 வயது), பாகிஸ்தானுக்கு எதிராக 2006ல் அறிமுகமான இவர் 2008ல் இருந்து 2016 வரை கேப்டனாகவும் அணியை வழிநடத்தி உள்ளார்.  அரியானா மாநிலம் சிர்சாவை சேர்ந்த சர்தார் 2012ல் அர்ஜுனா விருதும், 2015ல் பத்ம விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். தனது ஓய்வு முடிவை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், இது குறித்து சர்தார் சிங் நேற்று கூறுகையில், ‘ஹாக்கியை தாண்டி, வாழ்க்கை பற்றி யோசிக்க இதுவே சரியான நேரம் என கருதுகிறேன். உடல்தகுதி எனக்கு ஒரு பிரச்னை இல்லை. இப்போதும் முழு அளவில் தயாராகவே உள்ளேன். இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்றாலும், எல்லா விஷயமும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே தீர வேண்டும்’ என்றார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய அணியில் உடல்தகுதி காரணமாக தேர்வு செய்யப்படாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த சர்தார், அதன் பிறகு கடுமையாக பயிற்சி செய்து முழு உடல்தகுதியுடன் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். ஆசிய விளையாட்டு போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா 3வது இடம் பிடித்ததும் சர்தாரின் ஓய்வு முடிவுக்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

மூலக்கதை